Tuesday, July 22, 2008

மகரந்தச் சிறகு - அப்துல் ரகுமான்

சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் புகழ் பெற்ற பாடகர் அனூப் ஜலோட்டாவின் கஜல் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

காதலியின் அணைப்பில் இருப்பது போல் ரசிகர்கள் கஜலும் இசையும் தந்த போதையில் மயங்கிக் கிடந்தனர்.

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டதால் வீட்டுக்குப் போவதற்காக நான்கு பெண்கள் எழுந்து வாசலை நோக்கி நடந்தார்கள்.

அப்போது அனூப் ஒரு கஜல் கண்ணியின் முதல் அடியைப் பாடிக் கொண்டிருந்தார்.

இறந்த பிறகும்
என் கண்கள்
திறந்தே இருந்தன

எழுந்து சென்ற பெண்கள் "இறந்த பிறகும் ஏன் கண்கள் திறந்தே இருக்கின்றன?" என்பதை அறியும் ஆவலில் வாசலருகே நின்று விட்டனர்.

ஆவலைத் தூண்டிய அந்த அடி பெண்கள் நடப்பதற்காக எடுத்து வைத்த அடியை நிறுத்திவிட்டது.

அனூப் வேண்டுமென்றே முதல் அடியை மீண்டும் பாடினார்."என்ன சொல்லப் போகிறார்?" என்ற ஆர்வத்தில் பெண்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

அனூப் அதே அடியைத் திரும்பப் பாடினார். பாடுவதை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களைப் பார்த்து, "நீங்கள் வந்து உட்கார்ந்தால்தான் அடுத்த அடியைப் பாடுவேன்" என்றார்.

அந்தப் பெண்கள் வீட்டுக்குப் போகும் எண்ணத்தைத் தியாகம் செய்துவிட்டுச் சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்தனர்.

அனூப் அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்தபடியே பாடத் தொடங்கினார்.

இறந்த பிறகும்
என் கண்கள்
திறந்தே இருந்தன
எல்லாம் பழக்கம் தான்
இப்போதும் உனக்காகக்
காத்திருக்கிறேன்.

ரசிகர்களின் ஆனந்த ஆரவாரத்தில் மண்டபம் அதிர்ந்தது.